சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து இந்த கொலை வழக்கு சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ஓட்டுனர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் புகாரளித்த மதுரை சேர்ந்த நிகிதாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின் போது மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அசன் முகமது முன்பாக நேரில் ஆஜரானார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அசன் முகம்மது நிகிதாவிடம், நகை காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைக்க ஆட்சேபனை இருக்கிறதா?’ என்றார். அதற்கு நிகிதா, `ஆட்சேபனை ஏதும் இல்லை’ என வாய்மொழியாக கூறிய நிலையில் 9ஆம் தேதிக்கு ஆஜராகி எழுத்து மூலமாக அதை கொடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிகிதா பேசும் போது, “ நான் முழுக்க முழுக்க சட்டத்தை நம்பி நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன். எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது, தனிப்பட்ட முறையில் தான் நான் இங்கு வந்துள்ளேன். நான் பணி செய்யும் இடத்தில் கூட நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன், என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் ஊடகத்தில் என்னை கண்டபடி திட்டுகிறார்கள்.

நகை திருடு போனதற்கான முகாந்திரம் இல்லை என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இந்த வழக்கிற்கு பின்னதாக என்னுடைய தாயார் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். நான் முதன்முதலில் புகார் அளித்தது அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தான். அதன் பின்னர் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் புகார் அளித்துவிட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை என சிபிஐ அதிகாரிகள் மூலம் நிரூபணமாகிவிட்டது. எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக்கே ஆச்சரியமாக உள்ளது.
மறுநாள் காவல்துறை அதிகாரிகள் என்னை அழைத்த போது நகைகள் கிடைத்துவிட்டதாக நினைத்துதான் நான் அங்கு சென்றேன். அஜித்குமார் உயிரிழந்து விட்டார் என்பது அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, நாங்களே அழுதோம். அஜித்குமார் உயிரிழப்பு ஒரு தாய்க்கு ஈடு செய்ய முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பு. அதை எங்களாலும் தாங்க முடியவில்லை. ஸ்பெஷல் டீம் அழைத்து சென்று விசாரித்தார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் காவல் நிலையத்தில் இருந்த வரையும் மடப்புரம் அஜித் குமார் காவல் நிலையத்தில் தான் இருந்தார்” என தெரிவித்துள்ளார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.